Tuesday, October 27, 2009

நிஜங்களை செரித்தபடி



நேரத்தை ஏமாற்றியபடி

கழிந்த பொழுதுகளை

சுமந்த நாட்களால் நிரம்பி

கொதிக்கிறது மனம்

இரவுகளை எதிர்த்து

சண்டையிட ஆயத்ததுடன்

கடக்கிறேன் எனது வாசலை

தொலைக்காட்சி இறைக்கும்

பிம்பங்களுக்குள் கரைந்து

எனது பிம்பத்தை ஸ்தாபிக்க

அலறும் எனது குரல் மெளனமாய் கடக்கிறது

நிஜங்களை செரித்தபடி

Tuesday, October 20, 2009

தொடர்பவனாய்



ஏதொ தொடர்பால்
தொடர்பறுந்த வாழ்க்கையை
தொடரமால் தொட்டுச்செல்கிறது
கிழித்து எறியப்பட்ட தேதித்தாள்

கருவறைக்கும் எனக்குமான தொடர்பே
தொடர்பின் உச்சமாய் இன்னொரு
கருவறையை நிரப்புகிறேன்

என் கையில் த‌வ‌ழும் சிசுவின்
க‌ருவ‌றை வாசனை
மீட்டுச்செல்கிற‌து என‌து
தொட‌ர்ப‌றுந்த‌ வீணையை

தொடர்புகள் மட்டுமே
முடிவின் முகமாய்

முடிவின் நிட்சியாய்
புதுப்புது தொடர்புகள்
பூத்துக்கொண்டே வாடுகிறது
இருப்பினும்
தொடர்ந்து செல்கிறேன்
தொடர்பவனாய்

Friday, July 24, 2009

சிதைவின் குரல்



பெரும்பிரலள‌யம் என்னுள்
நாளைக்கான பிம்பங்கள்
விடாமல் துரத்துகின்றன‌
வெகுதுராம் வந்துவிட்டேன்
கடப்பதற்கான பாதைகள்
அத்தனையும் ஒவ்வொன்றாய்
சிதைத்துக்கொண்டு

சிதைவுகளையும் சேர்ந்தே
சுமந்துகொண்டு எனக்கான‌
ஆணியை ஏந்தியபடி
சிலுவையில் ஏறி
பெருங்குரலேடுத்து கத்துகிறேன்

எனது செவிச்சிறைக்குள்
இத்தனை நாள் புகாத‌
அத்தனைகுரல்களும் அந்தப்பெருங்குரலில்
மோதித்தெறிக்கின்றன…

வெறுமை நிறைந்த அந்த வெளியில்
எனது ஒற்றைக்குரல் மட்டும்
காற்றின் போக்கை மறுதலித்து
ஓங்கி அழைக்கிறது என்னை
சிலுவையில் அறையப்போகிறவனை

Thursday, July 23, 2009

பதில்களே போதும் என‌



பதில்களுக்கான கேள்விகள்
எழும் போது
எனக்கான அடையாளத்தை
கேள்விக்குள் பதுக்கி
தூக்கி எறிகிறேன்
அடையாளத்தின் ஆடைகளை

அம்மணமாய் பார்க்கும் போது
அவசரமாய் ஆடைகள் தேடி
அடையாளத்தை துறக்கிறேன்

இருளில் உலாவும்
ஆடைகளோ மோதித்தெறித்து
பெருங்குரலேடுத்து கத்துகின்றன‌
பதில்களே போதும் என‌

பதில்களோ மௌனச்சிரிப்புடன்
தனதாக்கிக் கொள்கிறது
எனக்கான ஆடைகளை

Wednesday, July 15, 2009

பதினென் பருவங்களின் பேய்கள்



இரவு முழுவதும்
சூழ்ந்த பிணவாடையில்
எனது கனவில் வந்த பேய்கூட
முகம் சிதைந்த நிலையில்

அம்மா சொன்ன மோகினிக்கதை
மோகினியை பார்க்க விரும்பிய
பதினென் பருவங்களின் பேய்கள்
ஏனோ இப்போது வருவதேயில்லை

அய்யனார் கோயில் பூசாரியோ
தனது உடுக்கையை நித்தம் தடவி
குதிரைக்கனவில் பேய்களை தேடி அலைகிறார்

அய்யனோரோ மண் குதிரை
புடைசூழ வெறித்துப்பார்கிறார்
ஆள் வருகையற்ற வீதிகளை

Friday, July 10, 2009

அவள் உதடுகள் விடாமல் துடிக்கிறது



குண்டென பரிசோதிக்கப்பட்ட
அவளின் மார்பகத்தில்
பால் சுரப்பை விடாது தேடுகிறது
முகம் சிதைந்த குழந்தை

அதன் வீறிடும் சபததில்
அவளின் கண்ணீர் உதிர்க்கும்
கதைகளை கதைக்க
அவள் உதடுகள் விடாமல் துடிக்கிறது

தன் உடலின் மேல் எழுதப்பட்ட
அத்தனை கதைகளையும்
தன்னுள் கதைத்து தொடர்ந்து ஓடுகிறாள்
காகம் கருகிக்கிடக்கும்
முட்கம்பிகள் வரை

முட்கம்பிகளின் தூரே தெரியும்
மஞ்சள் கறை படிந்த குளக்கரையை
நோக்கி அத்தனை ஆடைகளை
களைந்து அம்மணமாய் நிற்கிறாள்
அத்தனை அரசியலையும்
தன்னுள் சுமந்து

Thursday, July 9, 2009

மலம் கழிக்கஇரவை நோக்கிகாத்திருந்தேன்




குவிக்கப்பட்ட பிணங்களின்
மத்தியில் பிரிக்கப்பட்டன
உனக்கான தேசமும் எனக்கான மானமும்

முட்கம்பிகளின் தூரே தெரியும்
ஒற்றைப்பனை நோக்கிய
எனது பயணத்தை நாள் தோறும்
ஒத்திகை பார்க்கிறேன்

அரசியல் தீர்வு என்று
அலரும் எனது வானொலி சப்தம்
துடித்தலரும் சிறுமியின் குரலில்
கதறி அணைந்தது

துர்நாற்றம் வீசும் வீதிகளில்
எனக்கான பேரத்தை யார் யாரோ
பேசுகையில் நான் மலம் கழிக்க

இரவை நோக்கி காத்திருந்தேன்

Tuesday, July 7, 2009

புத்தனின் இரத்தம்

கந்தக நெடி கமழும்
புதத விஹாரில் ஏலம் விடப்பட்ட
புத்தனை எத்தனை கோடிக்கு
எடுப்பதன பலத்த போட்டி

நான் புத்தனில்லை என்று
கதறிய புத்தனின் வார்த்தைகள்
முகம் சிதைந்த குழந்தையின்
கதறில் கலைந்து அதிர்ந்து
கண்ணாடி பேழைக்குள்

இறுதியில் பிணக்குவியலின்
அளவு நிர்யணிகப்பட்ட ஏலத்தில்
காந்தியின் அவுக்கப்பட்ட கோவணம்
பெருமிதமாய் பரப்பியது முடை நாற்றத்தை

பேரழிவு தந்த வாய்ப்புகளை
சுவைக்க சுற்றி அலையும் ஒநாய்கள்
நட்சத்திர விடுதியில் அருந்திய மதுவில்
முடைநாற்றமுடன் பரிமாறப்பட்டது
புத்தனின் இரத்தம்

Friday, July 3, 2009

அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு

எனது தடத்தில் படிந்த
குருதிக்கறையை கழுவ
நீண்ட வரிசையில் நான்

பற்களில் படிந்த இரத்தக்கறையை
கழுவ என் முன்னால் நின்ற காந்தி
தன் கோவணத்தை தேடியபடியே
தன் தடியை தவறவிட்டார்

கந்தக நெடி பரவிய விழிகளுடன்
பிணவாடை சுமந்த புத்தனோ
தன் சாம்பல் குவியலை காந்தியின்
கோவணத்தில் கவனமாய் மறைத்தார்

காந்தியின் தடியை களவாடிய
ஊடகங்களோ ஒளிபரப்பின
அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு...

Monday, June 8, 2009

காயத்தின் குருரம்



சூழலின் வெளியில் தொலைத்த
எனது உணர்வலை
எப்போதாவ‌து என் சுவாசக்கிற்றை
க‌ட‌ந்து செல்கையில் ப‌ர‌வும் ப‌ர‌வ‌ச‌ம்
வார்த்தைக்குள் மட்டும் வ‌ருவ‌தேயில்லை
நாட்ப‌ட்ட‌ என‌து காய‌த்தை
குருதிக‌ல‌ந்த‌ ம‌ருந்துக‌ள் கூட‌
சீண்ட‌ ம‌றுக்கின்ற‌ன‌

என் புகைத்தலின் ஒரு பொழுதில்
க‌ட‌ந்த‌ என் ந‌ண்ப‌னின் முக‌த்தில்
என் காய‌த்தின் சீழ் வ‌டிவதை
சிரித்து ம‌றைக்க‌ முயன்ற‌தை
நானும் சிரித்து ம‌றைத்தேன்

ப‌ரஸ்ப‌ர‌ம் இர‌த்த‌க்க‌ரை ப‌டிந்த‌
ப‌ற்க‌ளை ப‌ரிமாறிய‌ப‌டி
ம‌துவிடுதியின் இரைச்சலை
அதிகப்படுத்தி வெளியில் பார்க்கையில்
அனைவரின் முகத்திலும்
எனது காயத்தின் குருரம்

Thursday, June 4, 2009

மௌனம் சூழ்ந்த உறவு (போட்டிச்சிறுகதை)

இன்றோடு அவனிடம் பேசி இரண்டு நாளாவது இருக்கும். அலைபேசி விடாமல் கதறிக் கொண்டே இருந்த்து. எடுப்பதா வேண்டாமா? என்ற யோசனைக்கு நடுவில் அலைபேசி கதறி அணைந்து அவ்விடமெங்கும் நிசப்தம் சூழ்ந்தது.மின் விசிறியை பார்த்தபடியே அவனின் நினைவுகள் என்னைச் சுழன்றபடியே இருந்த்து. முன்று மாததிற்கு முன்பு ஒரு நோயாளியாக எனக்கு அறிமுகமானான். இயல்பாய் பல நாள் பழகிய நட்புணர்வுடனான அவனது பேச்சு இந்த் துறைக்கு புதிது என்பாதல் எனக்கு ஆச்சிரியத்தை அளித்து.அவனது பேச்சும் அவனது நடத்தையும் விசித்திரமாய் வசிகரிக்ககூடியதாய் இருந்த்து..

அவனிடம் அவனது மருத்துவ சான்றிதலை அளித்து உங்களுக்கு ஹை.ஐ.வி தொற்று இல்லை என்று சொன்னேன். வழக்கமான இந்த மாதிரியான நோயாளிகளிடம் காணப்படும் விடுபட்ட உண்ர்வுடன் கூடிய மின்னும் கண்களிடம் வெளிப்படும் மகிழ்ச்சியும் நன்றி நவிழ்தல்களுமாய் அவனும் விடைபெற்றான். அன்று மாலையே மறுபடியும் அலைபேசியில் அழைத்தான்.

சிலரை நாம் சந்திக்கும் அந்த கணத்திலே ஏற்படும் நட்புணர்வு அவனிடம் இயல்பாய் வெளிபட்டது. அலைபேசி வழியாய் பேசிக்கொண்டோம் கிட்டத்தட்ட தினமும் பேசிக்கொண்டோம். குடும்பம், நண்பர்கள், திரைப்படம். கிசுகிசு. இலக்கியம் என அவன் சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தான். பல முறை முயற்சித்தும் இருவருக்குமான வேலை நேர அவலத்தால் சந்திக்கவே முடியவில்லை.


இந்த வார இறுதியில் எப்படியும் சந்திப்பது என்ற முடிவில் இருவரும் ஒரு ஞாயிறு ப‌க‌ல் உண‌வு வேலையில் ஒரு உண‌வு விடுதியில் ச‌ந்தித்துக்கொண்டோம். எங்களது சுவாரஸ்யமான பேச்சுக்கு நடுவில் எனது அலைபேசி கதறியது அம்மாட்ட இருந்து போன் என்று சொல்லியபடி அம்மாவிடம் பேசித்துவங்கினேன் வழக்கமான அம்மாவாய் அவளும் சராசரி மேன்சன் வாசியாக நானும் பேசித்தீர்த்தோம். என்னைப்
பார்த்து கொண்டே இருந்த அவனிடன் ’என்னடா அச்சு உனக்கு முறைக்கிற’ என்ற படி எனக்கான இருக்கையில் அமர்ந்தேன்.. அவனும் நீண்ட யோசனைக்குபின் அவன் ’அம்மாண்னா ரொம்ப புடிக்குமா?’ என்றான்
’என்னடா கேள்வி இது’ என்றேன்

சற்றே மௌனமாய் ’சமுக அந்தஸ்துதான் உறவையும் பாசத்தையும் நிர்ணயக்கிறது’ என்றான்..

’என்னடா என்ன ஆச்சு’ என்றபடி அவனைப் பார்த்தேன்
’விடுடான்னு’ அவன் வேறு எதை எதையோ பேசினான் அதற்கிடையில் எங்களுக்கான உணவைப் பரிமாறிச்சென்றார் பணியாளர்.

நான் மெதுவாக ’வீடு எங்கடா இருக்கு’ என்றேன்
’அவனோ இல்லை மச்சி தனியாத்தான்டா இருக்கேன்’ என்றான்
அப்பா அம்மா இங்க தானே இருக்காங்க அப்புறம் என்னடா என்று சொல்லியபடியே அவனைப்பார்த்தேன்..

என்னை அழமாய் பார்த்தான் சற்று நேர மௌனத்திற்கு பிறகு ’ஒரு கேயை( ஒரினச்சேர்க்கையாளர்) வீடும் சமுகமும் ஒத்துக்குமா” என்று சொல்லியபடி மச்சி அந்த சிக்கனை எடுத்து போடுடான்னு சொன்னான்.

அவ‌னிட‌ம் இந்த‌ வார்த்தையை நான் ச‌ற்றும் எதிர்பார்க்க‌வே இல்லை அப்ப‌டி சொல்வ‌தைவிட‌ அந்த‌ வார்த்தையை என்னால் ஜிர‌ணிக்க‌ முடிய‌வில்லை... அதற்கு பிறகு என்ன பேசுவது என்ற நினைப்பில் மௌனமானேன். அவன் என்னைப்பார்த்த்து சிரித்தபடியே இருந்தான் ..
பில்லை நான் தான் கொடுப்பேன் என்று பணத்தை செலுத்தினான்..உணவு விடுதியை விட்டு கிளம்பினோம். வெக்கை சூழ்ந்த அந்த வீதியில் வழக்கம் போல் அவன் பேசிக்கொண்டே வந்தான். நானோ வார்த்தைகளை தேடிக்கொண்டே இருந்தேன்..


இந்த கதை,உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

Wednesday, June 3, 2009

உயிப்பித்தலின் வாசனை


உவர்ப்பு சுவையை சுவாசித்த‌ படகின்
ஒவ்வொரு மரக்கட்டையும்
கிளைத்து வளர்ந்த அதன் வேர்களை களைய
துடுப்புடன் நித்தமிட்ட சண்டையில்
அது கலைந்த இலைகளின் பச்சைய வாசனையை
தன் மீதமரும் பறவைகளின் எச்சங்களில்
மீட்டு பரப்புகின்றன அவ்விடமெங்கும்

அலைகளிடம் பேசும் அதன்
நங்கூரமிட்ட கயிற்றின் கதைகளை
கேட்க மனமில்லமால்
தூரத்து கோயில் மணியோசையிடம்
அதன் ரகசியத்தை பகிர்தலில்
நேற்று துடித்தடங்கிய மீன்களின் உயிரோசையை
அலைகளிடம் விடைபெற்ற அதிகாலைப்பொழுதில்
கடைத்தெரு மீனவச்சியின்
வியர்வை வாசனையில் மிதக்க விடுகிறது

ரகசிய வார்த்தைகள் சூழ்ந்த
பின் மாலைப்பொழுது கால் தடங்களிடம்
உயிரற்ற மீன்களின் கண்களில்
படர்ந்த தன் பிம்பத்தின் ரகசியத்தை
சன்னமாய் பகிர்ந்து உயிப்பிக்கிறது
தனது நாட்களை

Tuesday, June 2, 2009

இர‌த்த‌ம் ப‌ச்சைய‌ வாச‌த்துட‌ன்



நீண்ட‌ ஒரு மாலைப்பொழுதில்
என் பார்வைக்கு அப்பால்
தோன்றிய அந்த மாநிறப் பெண்
தன் குதிகால் உய‌ர்ந்த‌ செருப்பை
அவ‌ளின் ம‌ல்லிகைப் பூவால் அல‌ங்க‌ரிப்ப‌தை
க‌ட‌ந்து சென்ற‌ காற்றின் வ‌ழியே
என‌க்கு உண்ர்த்தினால்
என‌து கோரைப்ப‌ற்க‌ள் இப்போது
அவ‌ளின் உதிர‌த்தைச் சுவைக்க‌
வ‌ள‌ர‌த்தொட‌ங்கின‌
ம‌ல்லிகையின் வாச‌னை நெருங்க‌ நெருங்க‌
க‌ட்டுக்க‌ட‌ங்கா என‌து பசியால்
அவ‌ள் கழுத்தின் ஓர‌ம்
மெல்லிய‌தாய் ப‌தித்தேன் என‌து ப‌ற‌க‌ளை
அவ‌ளின் இர‌த்த‌ம் ப‌ச்சைய‌ வாச‌த்துட‌ன்
அவ‌ளின் காய்த்துப்போன கைக‌ளால்
என‌து அணுறுப்பை அழித்தி பிடித்தால்
அவ‌ளின் இர‌த்த‌ம் வ‌ற்றிய‌ உட‌லை
க‌வ்விய‌ப‌டி மேலேழுந்து சென்றேன்
அவ‌ளின் மெல்லிய‌ முன‌க‌ல்
என்னை அதிக‌ தூர‌ம் இழுத்து சென்ற‌து
விடிய‌லை நோக்கி ந‌க‌ர்ந்து போது
என‌து தூர‌ம் சுருங்கி என‌து ப‌டுக்கைய‌றையில்
நாய்குட்டியாய் நான்
அவ‌ளோ ப‌டுக்கை விரிப்பை
சுற்றிய‌ப‌டி பூஜைய‌றையில்

Monday, June 1, 2009

கடக்கமுடியா பெருவெளி



என்னுள் தொலைந்துபோன‌
பாதையில் நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சியின் நிறங்களாய்

சாத்தப்படும் கதவுகளுக்கு அப்பால்
எப்போதும் மர்மப் புன்னகை ஒலியை
சலிக்காமல் உதிர்க்கிறாய்
நானோ கதவுகள் பொய்யென்று
மௌனமாய் கடக்கிறேன்

நீயோ புன்னகை ஒலியை
நிறங்களாய் மாற்றி கதவுகளை
அலங்கரிக்கிறாய்
நானோ நிறங்களும் பொய்யென்று
கதவுகளையும் கடக்கிறேன்

நீயோ நிற‌ங்க‌ளுக்கு வாச‌னை உண்டென
என‌து நாசித்துவார‌த்தை க‌ட‌க்கிறாய்
நானோ மூச்சும் பொய்யென்று
நிற‌ங்க‌ளை ம‌றுக்கிறேன்

இறுதியில் எதுவும் இல்லையென‌
நீயும் க‌ட‌க்கிறாய்
நானோ க‌ட‌த்த‌லே பொய்யென‌
அதையும் க‌ட‌க்கிறேன்

Friday, May 29, 2009

சாத்தியமற்றதைக் கோருங்கள்

இந்தக்கட்டுரையின் ஆசிரியர் லென் ப்ராக்கென் அமெரிக்க அரசவிழ்ப்பாளர் (anarchist). அரசவிழ்ப்பாளர்களை அராஜகவாதிகள் என்று எழுதும் வழக்கமே தமிழில் இன்றும் இருந்து வருகிறது. இச்சொல்லே அவர்களை மோசமானவர்கள் என்று சித்தரிப்பது. இதற்கு மாற்றாக அரசவிழ்ப்பாளர்கள் என்ற பதத்தை உருவாக்கிய சிறப்பு அ. மார்க்சிற்கு. (உறவு முறிந்துவிட்டால் மற்றவர்களை, அவர்களது பங்களிப்புகளை முற்றிலுமாக நிராகரிக்கும் இழிவான செயலை ஒருபோதும் செய்ததில்லை).கட்டுரையில் Extranational என்றிருப்பதை International என்பதற்கு மாற்றாக பொருத்தி யோசிக்க வேண்டுகிறேன். கம்யூனிஸ்டுகள் வழக்கமாக International - களைத் தொடங்குவார்கள். இவர் அரசவிழ்ப்பாளர் என்பதால் Extranational ஐத் துவங்கியிருக்கிறார்

மார்க்சியர்கள் உழைப்பைக் கண்மூடித்தனமாகப் போற்றுபவர்கள். மனிதனின் சாரம் உழைப்பு என்றும் வாதிடுவார்கள். மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானது உழைப்பினால்தான் என்பார்கள்.இதற்கு மாற்றான அரசவிழ்ப்பாளர்களின் கருத்தமைவே "உழைப்பை ஒழிப்பது". மனிதனின் உருவாக்கத்தில் விளையாட்டின் பங்கை பல மானுடவியலாளர்களின் ஆராய்ச்சிகள் இன்று நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. உழைப்புச் செயல்பாடு என்று சொல்லத்தக்கதே பல பழங்குடி இனத்தவர்களிடையே ஒரு விளையாட்டைப் போல நிகழ்த்தப்படுவதை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். இது தொடர்பாக விரிவாக எழுத எப்போது நேரம் வாய்க்கப்போகிறதோ தெரியவில்லை.

நானும் பாப் ப்ளாக்கும் சேர்ந்து 1994 பிப்ரவரியில் Extranational - ஐத் துவங்கியபோது, வெள்ளை மாளிகையிலிருந்து ஆரம்பித்து நாடு முழுக்கப் பரவியிருந்த பிற்போக்குக் கும்பல்களுக்கு எங்களுடைய தொழிலாளர் சார்பற்ற தேசிய எதிர்ப்பு நிலையை விளக்குவதற்காக "தேசங்களும் இல்லை, உழைக்கவும் தேவையில்லை" (No Nation, No Work) என்ற முழக்கத்தை நான் வைக்க நேர்ந்தது. இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் அப்போது மிகவும் அபத்தமாகத் தோன்றிய இந்தக் கருத்துக்கள் இப்போது பரவலான செல்வாக்கைப் பெற்று வருகின்றன.தேசியம் சுருண்டு விழுந்து சாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது போன்ற நிலைமை இன்னும் வந்துவிடவில்லைதான். என்றாலும், முன்னாள் யுகோஸ்லோவியாவிலும் இன்னும் பல்வேறு இடங்களிலும் தேசிய முரண்பாடுகள் அரங்கேறும் விதங்களைப் பார்க்கும்போது அது அதன் கடைசிப் புகலிடங்களை நோக்கி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறது என்று கருத இடமுண்டு. இதற்கு சாட்சியம் சொல்வது போல தேசிய வானொலியேகூட அரசுத் தூதர்களையும் இன்னும் மற்ற தேவையில்லாத சின்னங்களையும் வைத்துக் கொண்டு காலம் தள்ளிக்கொண்டு இருக்கும் தேசிய - அரசுகள் காலாவதியாகிவிட்டது குறித்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது

தேசியம் என்கிற சொறிபிடித்த நாயை அடுத்த நூற்றாண்டில் நாம் சவக்குழிக்கு அனுப்பிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஏராளமான மக்கள், ஒரு சர்வதேசிய ஒழுக்கவியலை, முற்றிலும் அந்நியர்களான நபர்களிடத்தில் மட்டுமே நம்மை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்ற அளவுக்கு நாம் ஒவ்வொருவரும் நமக்கே அந்நியர்களாகி விட்டிருக்கிறோம் என்பதை அங்கீகரிக்கும் ஒரு ஒழுக்கவியலை ஏற்கனவே தழுவிக்கொண்டு விட்டிருக்கிறார்கள். இதில் உண்மையான சோதனை, தேசியத்தின் எந்தவிதமான வெளிப்பாட்டிற்கு எதிராகவும், பாசிசத் தலையை எங்கெல்லாம் அது நீட்டுகிறதோ அங்கெல்லாம் தலையிட்டு அதற்கெதிராகப் போராடுவதில்தான் இருக்கிறது

ஜெரமி ரிஃகின்ஸின் "வேலையின் மரணம்" என்ற அரைகுறையான பிரகடனத்தின் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் வழங்க வைத்திருக்கிற எல்லாப் பண்டங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் போதுமான நுகர்வோர் இல்லை என்ற அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் அவசியமான வேலைகள் இல்லை என்ற ரகசியம் நாடாளுமன்றச் சிற்றுண்டிச் சாலையின் மேசைகளுக்குப் பரவியிருக்கிறது. உலகம் முழுக்க 900 கோடி மக்கள் வேலையற்றோர் வரிசையில் நின்றுகொண்டிருக்க, இந்தப் பெரும் நிறுவனப் பொருளாதாரம் தூக்கி எறியப்பட வேண்டிய ஒரு சர்வாதிகார அமைப்பு என்ற உண்மை மேலும் மேலும் அதிகமான மக்கட் பிரிவினருக்கு பட்டவர்த்தனமாகிக் கொண்டிருக்கிறது.வாரத்தில் 30 மணி நேர உழைப்பு என்று ரிஃப்கின்ஸின் விடுத்த தொலைநோக்கற்ற அறைகூவலையும் மீறி, வேலையின் மதிப்பு மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் வழியாக எங்கும் பரவியிருக்கிற சந்தைப் பொருளாதாரம் இவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதில் அவர் செலுத்திய அசுரத்தனமான உழைப்பிற்கு நாம் உரிய மரியாதையைத் தந்துதான் ஆக வேண்டும். இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்து வருடாவருடம் விலக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற பல கோடி மக்களுக்கு வரும் காலங்கள் மிகவும் மோசமானதாகவே இருக்கும் என்றாலும், மற்ற எல்லா சமூக இயக்கங்களைக் காட்டிலும் வேலை - மறுப்பு இயக்கம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் மறுத்துவிட முடியாது.

அப்புறம், இந்த "தேசியமும் இல்லை, உழைக்கவும் தேவையில்லை" என்ற முழக்கம் செல்வாக்குப் பெற்றுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், என்னுடைய முதல் ஆரவாரப் பிரகடனமான City of Death - லும், அடுத்து எனது நாவல் The West is Red - லும் முன்வைத்த கோரிக்கைகளை தொடர்ந்து பரிசீலித்து மாற்றியமைத்து வைப்பதன் மூலம் மாறும் காலச் சூழல்களுக்கேற்ப நானும் என்னைத் தகவமைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்

இதோ, சமீபத்திய எனது கோரிக்கைகள்:
1. தேசிய, இனவாத, பாலியல் ரீதியிலான இன்னும் மற்ற அனைத்து வடிவிலான குறுகிய வெறித்தனங்களும் ஒழிக்கப்பட வேண்டும்.

2. அவசியமற்ற வெள்ளைக்காலர் வேலைகள் ஒழிக்கப்பட்டு வாரத்திற்கு 10 மணி நேர வேலை அமுலாக்கப்பட வேண்டும்.

3. பணக்காரர்களின் ஜனநாயக விரோத ரகசியத்தன்மை ஒழிக்கப்பட்டு செல்வம் சேர்ப்பதின் மீது கட்டுப்பாடு கொண்டுவரப்பட வேண்டும்.

4. பங்குச் சந்தையின் ஒட்டுண்ணித்தனமான பங்குதாரர் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. எல்லா இடத்திலும் எல்லாக் கடன்களையும் ரத்து செய்து, முழுக்க முழுக்க வட்டியில்லாத கூட்டுறவு வங்கி முறை நிறுவப்பட வேண்டும்.

6. இராணுவத்திற்கான செலவுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு திருப்பிவிடப்பட வேண்டும். இராணுவத்தினருக்கான சிறப்புச் சலுகைக் கடைகள் மற்றும் பிற அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

7. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் வெளியீட்டகங்கள் அனைத்தும் மக்கள் கவுன்சில்களின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

8. உளவுத்துறை, விண்வெளித்துறை போன்ற அவசியமற்ற துறைகள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.

9. அரசியல் கைதிகள் மற்றும் சமூக ஒப்புதல் பெற்ற குற்றங்களுக்காக (consensual crimes) - உதாரணத்திற்கு, கொக்கோ வைனைக் குடிப்பது - கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

10. இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து செயலாற்றுபவர்கள் மீது எந்தவிதமான ஒடுக்குமுறையும் தொடுக்கப்படமாட்டாது என்ற உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும்.